வெட்டுக்கிளிகள் பறக்கக்கூடியவை . தரையிலே இவை தத்திப்போகாது (லேவியராகமம் 11:21). வெட்டுக்கிளிகளில் Cricketer என்றொரு இனம் உள்ளது. இவை தத்தும், பறக்கும். மொழிபெயர்ப்பாளர்கள் வெட்டுக்கிளிகளை katydid, locusts என்றும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
வேதாகமத்தில் பல இடங்களில் வெட்டுக்கிளிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பூர்வகாலத்தில் பாலஸ்தீன தேசம் போன்ற வறட்சியான தரைப்பகுதியில் வெட்டுக்கிளிகள் இருந்தன. வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் வெட்டுக்கிளிகளில் ஏராளமாக பிரத்தியட்சமானவை (யாத்திராகமம் 10:4-19), மற்றவை அடையாளமாகக் கூறப்பட்டுள்ளன (எண்ணாகமம் 13:33).
வெட்டுக்கிளிகளைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் grasshopper, locust ஆகிய இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரண்டுமே ஒரே பொருளைக் கொடுக்கக்கூடியவை. இவ்விரண்டு சொற்கள் தவிர, katydid என்னும் வார்த்தையும் வெட்டுக்கிளியைக் குறிப்பிடுகிறது (லேவியராகமம் 11:22). வெட்டுக்கிளிகள் மிகவும் ஆபத்தானவை. அவை அதிகளவில் இனப்பெருக்கம் செய்து, எல்லாவிதமான பயிர்வகைகளையும் ஒரே நாளில் தின்றுவிடும். காட்டையே அழித்துவிடும்.
கர்த்தர் எகிப்தியர்மீது எட்டாவது வாதையாக வெட்டுக்கிளிகளை அனுப்பினார். கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மீது பறந்துவந்தன. வெட்டுக்கிளிகள் மிகவும் விரைவாக உண்ணும் பழக்கமுடையவை. ஒரு தோட்டத்திற்குள் வெட்டுக்கிளிகள் வந்துவிட்டால், அவற்றின் மூலமாக வரும் அழிவை நிறுத்துவது சிரமம். வெட்டுக்கிளிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டாலும், மற்ற வெட்டுக்கிளிகள் செத்துப்போன வெட்டுக்கிளிகளைப் பாலம்போல பாவித்து அவற்றின்மீது கடந்து செல்லும். தற்காலத்திலும், வெட்டுக்கிளிகளினால் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன. வெட்டுக்கிளிகளை விஷமருந்து தெளித்து அழிப்பதைவிட அவற்றின் முட்டைகளை அழித்துப்போட்டால், இனம்பெருக்கத்தைத் தடுக்க முடியும் .
வெளிப்படுத்தின விசேஷம் 9:1-4 ஆம் வசனத்தில் வெட்டுக்கிளிகளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
"ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது."
"அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது."
"அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது."
"பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது."
வெட்டுக்கிளிகள் தண்ணீருள்ள இடகளில்தான் வாழும் என்று கூறமுடியாது. உஷ்ணமான தரையிலும் அவை வாழக்கூடியவை. பாலஸ்தீன தேசத்தில் கோடைகாலத்திலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன.
வெட்டுக்கிளிகளுக்கு உணவுபற்றாக்குறை ஏற்படும்போது, பெண்வெட்டுக்கிளிகளின் உடம்பில் ஒருசில மாற்றங்கள் உண்டாகும். அவற்றின் முட்டைகளெல்லாம் அக்காலத்தில் குஞ்சு பொரிக்கும். இதனால் ஏராளமான வெட்டுக்கிளிகள் உற்பத்தியாகி, அவை எல்லா இடங்களுக்கும் பறந்து சென்று, பஞ்சகாலத்தில் தங்களுக்குத் தேவையான உணவு வகைகளைச் சேகரிக்கும் .
யூதர்கள் வெட்டுக்கிளிகளை உணவாகப் புசித்தார்கள் (லேவியராகமம் 11:22). அவற்றை வறுத்தும், காயவைத்தும், அவித்தும் புசித்தார்கள். யோவான்ஸ்நானன் வனாந்தரத்தில் இருந்தபோது வெட்டுக்கிளிகளைப் புசித்தார் (மத்தேயு 3:4). வெட்டுக்கிளிகள் சீக்கிரமாக இனவிருத்தி செய்யக்கூடியவை. வேதாகமத்தில் வெட்டுக் கிளிகள் சேனைகளுக்கு ஒப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. (நியாயாதிபதிகள் 6:5, நியாயாதிபதிகள்7:12, சங்கீதம் 105:34, எரேமியா 46:23, எரேமியா 51:14, யோவேல் 1:4, நாகூம் 3:15).
வெட்டுக்கிளிகளினால் தாவர வகைகளுக்கு காட்டுத்தீயை விட அதிக சேதம் உண்டாகும். காட்டுத்தீயைவிட வெட்டுக்கிளிகள் பயிர் வகைகளை விரைவில் அழித்துப்போடும். சங்கீதம் 78:46 ஆம் வசனத்தில் இந்த வாதையைப் பற்றி இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். ஆதாமின் காலத்திலிருந்து இதுவரைக்கும் இப்படிப்பட்ட அழிவு வெட்டுக்கிளிகளினால் ஏற்பட்டதில்லை. இது இயற்கையான அழிவல்ல, தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் உண்டான வாதை.