தேவனுடைய திட்டங்களை கண்டறிதல்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 01-Jan-1970



தேவனுடைய திட்டங்களை கண்டறிதல்

தேவனுடைய திட்டங்களை கண்டறிதல்(எரேமியா 29:4-11, எபேசியர் 2:6-10, சங்கீதம் 25, மத்தேயு 6:9-13):

"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11).

நாம் தற்செயலாகப் பிறந்தவர்களல்ல, ஒரு நோக்கத்தோடு உருவாக்கப் பட்டவர்கள். இப்படியாக நம்மை உருவாக்கினவர் நம்மை உருவாக்கும் முன்னதாகவே நம்மை முழுமையாக அறிந்தவராயிருக்கிறார் என்ற உண்மை நமக்கு எத்தனை ஆச்சரியமும் ஆறுதலானதுமான செய்தியாயிருக்கிறது. தினமும் நாம் தேவனுடைய வழியில் நடப்பதற்கு, இந்த ஒரு உண்மையே போதும். அதுமட்டுமல்ல, தேவனுடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தேவன் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார் என்ற உண்மையையும் நாம் சிந்தித்துப் பார்ப்போமானால், அந்த சிந்தனை, ‘நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்’ என்று சிந்திக்கத் தூண்டும். சிந்தித்தால் நம்மில் அநேகர் நம்மைக் குறித்தே வெட்கப்படவேண்டியதிருக்கும். ஏனெனில், தேவன் நம்மில் கொண்டிருக்கும் நோக்கத்திற்கு நேர்மாறாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற உண்மை நமக்கே தெரியவரும். இப்பொழுது நாம் என்ன செய்யப்போகிறோம்?

1) உங்கள் வாழ்க்கைக்கான கிறிஸ்துவின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது (Understanding God's Purpose for Your Life):

"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்" (எபேசியர் 2:10).

“மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான் (பிரசங்கி 12:8). இன்றும் ஏராளமானோருடைய பிரச்சனையும் இதுதான். நாமும்கூட பல சந்தர்ப்பங்களிலே எல்லாமே பொய் என்று சொல்லிவிடுகிறோம். நமது சூழ்நிலை அப்படி நினைக்கவும் சொல்லவும் வைக்கிறது. வாழ்க்கையை வெறுத்து, கர்த்தர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று கேட்குமளவிற்கு சிலசமயம் மனமொடிந்து போகிறோம். திகைக்க வைக்கும் வியாதி, நம்பிக்கைத் துரோகம், மலிந்துவிட்ட மரணம், தொலைந்திடும் உறவு, இப்படிப்பட்டதான நெருக்கடிகளுக்குள் அகப்படுகிறவர்களால் கேள்விகளை எழுப்பாமல் இருக்கமுடியாதுதான், அதற்காக தேவபிள்ளைகளாகிய நாமும் இந்தச் சூழ்நிலைகளில் இன்று தடுமாறலாமா?

நம்மில் பலரும் அறிந்தவொரு உதாரணம், தன் வேலையை மகனின் தொந்தரவின்றி செய்வதற்காக, ஒரு உலக வரைப்படத்தை துண்டுதுண்டாகக் கிழித்துவிட்டு, திரும்பவும் ஒன்றுசேர்க்கும்படி மகனிடம் கொடுத்தார் அப்பா. இதனைப் பொருத்துவது சிறுவனுக்குக் கடினம் என்பது அப்பாவின் எண்ணம். ஆனால் ஒரு ஐந்து நிமிடத்திற்குள் “முடிந்தது” என்ற சத்தம்கேட்டு திடுக்கிட்டார் அப்பா. அவ்வளவு சீக்கிரத்தில் எப்படி முடித்தாய் என்றார் அப்பா. அதற்கு மகன் அப்பா, இத்துண்டுகளின் மறுபக்கத்தில் ஒரு மனிதனின் பகுதிகளைக் கண்டேன். மனிதனைச் சரியாகப் பொருத்தினேன் உலகப்படம் வந்துவிட்டது என்றான் மகன். மனிதன் சரியானால் உலகம் சரியாகும் என்பது உண்மைதான். ஆனால் மனிதன் சரியாக, அவன் தன் நோக்கத்தைத் தானே அறியவேண்டுமே!

தேவப்பிள்ளையே, சூழ்நிலைகளையும், சூழ இருக்கிறவர்களையும் நோக்குவதால்தான் அநேக குழப்பங்களுக்கு பதில் கிடைப்பதில்லை. முதலாவது நம்மையும் நமது பார்வையையும் சரிப்படுத்தவேண்டும். அதற்கு நமது வாழ்வின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தேவகுமாரனுடைய சாயலுக்கு நாம் ஒப்பாக வேண்டும் என்பதுதான் நம்மை படைத்தவருடைய ஒரே நோக்கம் என்பதை வேதாகமம் நமக்குத் தெளிவாகப் போதித்திருக்கிறது. நமது ஒவ்வொரு அசைவும் மூச்சும் அந்த ஒரே நோக்கத்தையே வெளிப்படுத்தவேண்டும்.

2) உங்கள் தனித்துவமான பரிசுகளையும் திறமைகளையும் ஏற்றுக்கொள்வது: (Embracing Your Unique Gifts and Talents):

2தீமோத்தேயு 1:6-7 என்பது, தீமோத்தேயுவுக்குள் இருக்கும் தேவனுடைய வரத்தை “அனல்மூட்டி எழுப்பிவிடும்படி” பவுல் நினைவூட்டும் வசனம், தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். இந்த வசனங்கள், தேவனுடைய ஊழியத்தைச் செய்யும்போது ஏற்படும் பயம், தயக்கம், கோழைத்தனம் போன்ற உணர்வுகளை எதிர்கொள்ளும்போது, நமக்குள்ளே இருக்கும். தேவ ஆவியின் பலத்தையும், அன்பையும், சுயக்கட்டுப்பாட்டையும் எழுப்பி, தைரியமாகச் செயல்பட வேண்டும் என்பதை தீமோத்தேயுவுக்கு பவுல் வலியுறுத்துவதாகும்.

3) ஜெபத்தின் மூலம் கடவுளின் வழிகாட்டுதலைத் தேடுதல் (Seeking God's Guidance Through Prayer):

யாக்கோபு 1:5 (ask God for wisdom) and சங்கீதம் 25:4 (show me Your ways) “உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும்… உம்முடைய வழியை எனக்கு அறிவியும் (யாத்திராகமம் 33:13). மோசே ஒரு சிறந்த தலைவர், தேவனோடு மிகவும் நெருங்கி வாழ்ந்தவர். ஒருவன் தன் சிநேகிதனோடு பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடு முகமுகமாய் பேசினார். வேதப்புத்தகத்தில் அநேகருக்கு இவ்விதமான சர்ந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மோசே மனதுருக்கத்துடன் ஜெபிக்கிறார். இந்த ஜனத்தை வழிநடத்த தன்னோடுகூட யாரை அனுப்புகிறீர் என்று கேட்கிறார். என்றாலும், தேவனுடைய கண்களில் தயை கிடைத்திருப்பதை உறுதிப்படுத்துகிறார். அந்த ஜனம் தன்னுடையதல்ல, தேவனுடையது என்றும், அந்த ஜனத்தை வழிநடத்த தேவ வழி நடத்துதலே தேவை என்றும் அறிக்கை செய்கிறார். தேவசமூகம் முன்செல்லாவிட்டால் தங்களை அந்த இடத்திலிருந்து கொண்டுபோக வேண்டாம் என்றும் ஜெபிக்கிறார். எவ்வளவு ஆணித்தரமான ஜெபம்! தேவ வழிநடத்துதல் இல்லாமல் எதுவும் முடியாது என்ற அறிக்கை இந்த ஜெபத்திலே தெரிகிறது. மோசே, முற்றிலுமாக தேவனையே சார்ந்துகொண்டார்.

நமது பொறுப்புகளில் எவ்வளவாக தேவனை சார்ந்து செயல்படுகிறோம்? மனுஷ உதவிகள் தேவைதான். ஆனால், அதுவும் தேவனிடத்திலிருந்துதான் வரவேண்டும். நாம் செய்யக்கூடியது ஒரேயொரு காரியம் மாத்திரமே. அது தேவசமுகம் நம்மோடிருக்கவேண்டும் என எப்போதும் வாஞ்சிப்பதாயிருக்கவேண்டும். அவருடைய வழிநடத்துதல் நம்முடன் இருக்கிறது என்பதை அறிகின்ற அறிவு நமக்கு அவசியம். இதற்கு, மோசேயைப்போல தேவனோடு நெருங்கிய உறவு தேவை. அவர் சமூகம் இல்லையானால், நமது வாழ்வின் பிரயாணத்தை நிறுத்திவிடவும் தயாராய் இருக்கவேண்டும். நம்மிடம் அவ்வளவு வைராக்கியமுண்டா? தேவ சகத்தில் நாம் தரித்து நின்று அவருடைய வழிநடத்துதலுக்காக ஊக்கமாக ஜெபிக்கிறோமா?

4) ஆண்டவரின் நேரத்தை நம்புதல் (Trusting God's Timing):

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் என்று பவுல் காலத்தியர் 4:5 இல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். சரியான காலத்திலே ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வந்தார். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் காலம் நிறைவேறினபோது இந்த உலகத்திலே வந்தார். முதலில் தீர்க்கதரிசிகளின் மூலமாகவும், பரிசுத்தவான்களின் மூலமாகவும் மற்றும் நியாயாதிபதிகளின் மூலமாகவும் தேவன் தம்மை வெளிப்படுத்தினார். ஏற்றகாலம் வந்தபோது தன்னுடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார். வேதத்தை வாசித்துப் பார்ப்போமென்றால் அவர் எல்லாவற்றையும் அந்தந்த காலத்திலே நேர்த்தியாய் செய்கிறவராக இருக்கிறார். “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிரசங்கி 3:11). குமாரனாகிய இயேசுவின் வாழ்க்கையிலும் அந்தந்த காரியங்கள் அந்தந்த காலத்திலே செய்யப்பட்டிருக்கிறது. அதே போல, என் வாழ்க்கையிலும், உங்கள் வாழ்க்கையிலும் ஆண்டவர் நினைக்கிற காரியங்கள் அந்தந்த காலத்திலே கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பைப் பெறுவோம்.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்கு சென்றார்கள். நானூற்று முப்பது ஆண்டுகள் அடிமைகளாய் கஷ்டப்பட்டார்கள். ஏற்றகாலம் வந்தபோது கர்த்தர் மோசேயை அனுப்பினார். எல்லாமே ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை எல்லாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. சங்கீதக் காரனாகிய தாவீது “என் காலங்கள் உமது கரத்தில் இருக்கிறது (சங்கீதம் 31:15) என்று சொல்லுகிறார். காலம் நிறைவேறினபோது ஆண்டவராகிய இயேசு கானாவூர் கல்லியாண வீட்டிற்குச் செல்கிறார். அங்கே திராட்சரசம் குறைவுபட்ட செய்தியை மரியாள் இயேசுவிடம் சொல்லும்போது, அதற்கு அவர், என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அதே நேரத்தில் ஆண்டவர், தான் மரிக்கப்போகும் காலம் வந்தபோது, என் வேளை வந்தது என்றார். ஆண்டவர் தனது கால கிரமத்தின்படிதான் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

கதை:

மலைகளுக்கு இடையில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில், உலகின் மிக அழகான தேவாலயக் கதவுகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற ஒரு கைதேர்ந்த சிற்பி வாழ்ந்து வந்தார். அவருடைய பட்டறையின் ஒரு மூலையில், பெரிய, முடிச்சுகள் நிறைந்த ஒரு ஓக் மரக்கட்டை இருந்தது. அது முறுக்கியும், முடிச்சுகள் நிறைந்தும் இருந்தது, அருகில் இருந்த நேர்த்தியான, வழவழப்பான தேவதாரு மரப் பலகைகளுடன் ஒப்பிடும்போது அது முற்றிலும் பயனற்றதாகத் தோன்றியது.

பல ஆண்டுகளாக, அந்த ஓக் மரக்கட்டை தனக்குள்ளேயே புலம்பியது. "நான் ஒரு தோல்வியாளன்," என்று அது நினைத்தது. அந்தத் தேவதாரு மரம் ஒரு பிரம்மாண்டமான கதவாக மாறும், அந்தப் பைன் மரம் ஒரு உறுதியான மேசையாக மாறும். ஆனால் நான் ஒரு கதவாக இருப்பதற்கு மிகவும் கோணலாக இருக்கிறேன், ஒரு நாற்காலியாக இருப்பதற்கு மிகவும் சொரசொரப்பாக இருக்கிறேன். இந்தப் பட்டறையில் எனக்கு எந்தப் பயனும் இல்லை. ஒரு நாள், கைதேர்ந்த சிற்பியின் இளம் சீடன் அந்த ஓக் மரக்கட்டையை எடுத்து, பட்டறையைச் சூடாக வைத்திருக்க அதை நெருப்பில் போடுமாறு பரிந்துரைத்தான்.

கைதேர்ந்த சிற்பி அவனைத் தடுத்தார் இல்லை என்று மென்மையாகக் கூறினார். "அந்த மரக்கட்டைக்கு அது மட்டுமே கொண்ட ஒரு குறிப்பிட்ட வளைவு இருக்கிறது. அது ஒரு கதவாக இருப்பதற்காக உருவாக்கப்படவில்லை. அது ஒரு உயர்ந்த அழைப்பிற்காகக் காத்திருக்கிறது." அந்தச் சிற்பி பல வாரங்கள் அந்த ஓக் மரத்தில் வேலை செய்தார். அதை நேராக்க அவர் முயற்சிக்கவில்லை; மாறாக, அதன் இயற்கையான வளைவுகளைப் பின்பற்றினார். அவர் முடிச்சுகளுக்குள் ஆழமாகச் செதுக்கி, அந்த குறைகளை நுணுக்கமான விவரங்களாக மாற்றினார். அவர் வேலையை முடித்தபோது, ​​அது ஒரு கதவாகவோ, மேசையாகவோ அல்லது நாற்காலியாகவோ இல்லை. அது ஒரு “சிலுவை முழு தேவாலயத்தின் மையப்பொருளாக இருந்தது. ஒரு கதவுக்கு பயனற்றதாக இருந்த அதே வளைவுகள்தான், இப்போது அது தாங்கிய உருவத்தின் கருணையையும், துக்கத்தையும், சித்தரிக்கக்கூடிய பட்டறையில் உள்ள ஒரே மரக்கட்டையாக அதை மாற்றியது. தனது "கோணல் தன்மை" ஒரு தவறு அல்ல, என்பதை அந்த ஓக் மரம் உணர்ந்தது. அதுவே அந்த மாஸ்டர் தனது மிகச்சிறந்த படைப்பிற்குத் தேவையான சரியான வடிவம்.

முக்கியப் படிப்பினைகள்:

குறைகளே பெரும்பாலும் சிறப்பம்சங்கள்: உங்களைத் தகுதியற்றவர்கள் என்று நீங்கள் நினைக்கும் விஷயங்கள் உங்கள் கடந்த காலம், உங்கள் போராட்டங்கள் அல்லது உங்கள் "கோணலான" பாதை இவைதான் வேறு யாராலும் செய்ய முடியாத வகையில் மற்றவர்களுக்கு உதவ கடவுள் பயன்படுத்தும் விஷயங்களாக பெரும்பாலும் இருக்கின்றன.

பார்வை முக்கியம்: நாம் நம்மைப் பயனற்ற மரக்கட்டை போலப் பார்க்கிறோம். படைப்பாளரோ நிறைவுற்ற ஒரு தலைசிறந்த படைப்பாக நம்மைக் காண்கிறார்.

பொறுமையே நோக்கத்தின் ஒரு பகுதி: சில சமயங்களில், 'செயல்படுவது' போலவே 'காத்திருப்பதும்' திட்டத்தின் ஒரு பகுதியாகும். சரியான திட்டம் வரும் வரை அந்த ஓக் மரம் ஒரு மூலையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

முடிவு:

தமது பிள்ளைகள் யாவருடைய வாழ்விலும் ஆண்டவர் ஒரு நோக்கம் வைத்திருந்தாலும், சிலரை பிரத்தியேகமான சில தேவைக்காக விசேஷமாக நியமிக்கிறவராயிருக்கிறார். இஸ்ரவேலை ஆள்வதற்கு தாவீதையும், பயமின்றி வார்த்தையை உரைக்க எரேமியாவையும், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்த யோவான்ஸ்நானகனையும், புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க பவுலையும், தேவன் விசேஷமாக அழைத்தார். தமக்காகப் பாடுபடவேண்டுமென்று சிலரைத் தெரிந்தெடுத்திருக்கிறார் (அப்போஸ்தலர் 9:16), அவர்களும் தமது பணியில் உண்மையாயிருந்தார்கள்.

கிறிஸ்தவனே, நீ கிறிஸ்துவின் பிள்ளை என்பது மெய்யானால், அவர் உனக்காகவும் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார், அந்த நோக்கத்தில் அவர் உனக்காக வைத்திருக்கிற பணியில் நீ உண்மையாகவே நிற்கிறாயா? என்பதை சிந்தித்து மனந்திரும்புவாயாக அல்லது, ஒரு பிரத்தியேகமான பணிக்காக உன்னை அழைத்திருப்பாரானால், பலவிதங்களிலும் அது உனக்கு உணர்த்தப்படுமானால் தாமதியாதே, உனக்குத் தகுதி இல்லை என்று எண்ணாதே, திக்குவாயன் என்று கூறிய மோசே செய்த பிரசங்கங்கள் எத்தனை? சிறுபிள்ளை என்று சொன்ன எரேமியா சொல்லி முடித்த தீர்க்கதரிசனங்கள் எத்தனை? இறுதியாக, பிரத்தியேக அழைப்புகான தெளிவு எதுவும் இல்லையெனில், அதைப்பற்றிய தெளிவு வரும் வரைக்கும் அன்பு செலுத்தவும், தேவனைச் சேவிக்கவும், கீழ்ப்படிந்திருக்கவும் அதிலே நிலைத்திருக்கவும் வேண்டும்.




  :   1 Likes

  :   16 Views